Pages

Wednesday, March 13, 2013

மனித உரிமைகளை மதித்து நாம் நடக்கும்போது இலங்கைக்கு வெளியில் உள்ளவர்கள் விமர்சிக்கின்றனர் - புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி!

Wednesday, March 13, 2013
இலங்கை::மனித உரிமைகளை மதித்து நாம் நடக்கும்போது இலங்கைக்கு வெளியில் உள்ளவர்கள் விமர்சிக்கின்றனர் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

8 மாதங்களின் பின்னர் வவுனியா சிறைச்சாலை புதிய கட்டிடத்தொகுதியுடன் மீண்டும் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'மனித உரிமைகளை மதித்து இன, மத, மொழி பேதம் இல்லாமல் இந்த நாட்டில் வாழ்கின்ற எல்லோரையும் சமமாக மதிக்கின்ற பல்வேறு பணிகளை எங்களுடைய அமைச்சும் எமது அரசாங்கமும் முன்னெடுத்து வருகின்றன. அதற்காக பல்வேறு முயற்சிகைளயும் எடுத்துவருகின்றோம். இப்படியான ஓர் சூழலில் இலங்கைக்கு வெளியே இருந்து பார்க்கின்றவர்கள் பல்வேறு விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கின்றார்கள். அவர்களிடம் நாம் மிக விநயமாக கூறுகின்றோம். அதாவது இங்கு நாங்கள் செய்யும் புனர்வாழ்வுப் பணிகளை மிகவும் கவனமாகப் பாருங்கள். இங்கு இளைஞர், யுவதிகளுக்கு செய்துள்ள வசதி வாய்ப்புக்களை பாருங்கள் என்று கூறுகின்றோம்.

ஜனநாயகத்தை நாடுபவர்களாக நாம் இருக்கவேண்டும். எந்த வகையிலும் ஆயுதக் கலாசாரத்தை நாடுபவர்களாக நாம் மாறக்கூடாது. எந்தக் காரணம் கொண்டும் அது வெற்றியளிக்காது. ஆகவே அது குறித்து நாம் நம்பிக்கை கொள்ளக்கூடாது. ஜனநாயக மனித விழுமியங்களை மதிக்கவேண்டும் அவ்வாறு நாம் செயற்பட்டால் இந்த நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்; என்ற பேதம் இன்றி நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.

கடந்த வருடம் ஜுன் மதம் 28ஆம் திகதி ஏற்பட்ட துரதிஷ்டவசமான நிலை குறித்து நாம் கவலையடைந்தோம். இதன்; காரணமாகவே இந்த சிறைச்சாலை தற்காலிமாக மூடப்பட்டது. இவ்வாறு இந்த சிறைச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டபோது, இங்கிருந்த கைதிகள் அநுராதபுர சிறைச்சாலைக்கும் மகர சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டார்கள். இதன் காரணமாக கைதிகளின் உறவுகள் பெரும் சிரமத்திற்கு முகம்கொடுத்திருந்தனர்.

நான் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளை சந்தித்தபோது, அவர்கள் தங்களது குறைகளை என்னிடம் தெரிவித்திருந்தனர். அவை குறித்து நாம் நடவடிக்கை எடுத்தோம். சிறைச்சாலை சம்பவம் ஏற்பட்டபோது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. முற்றுமுழுதாக இந்த சிறைச்சாலை மூடப்பட்டு விடும் என்று எல்லாம் கருத்து கூறப்பட்டது. ஆனால் நாம் இருந்ததை விட வசதிகளையும் வாய்ப்புக்களையும் அதிகரித்து இந்த சிறைச்சாலைக்குள்ளே இருப்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து திறந்து வைத்துள்ளோம்.

புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடம் உட்பட புனர்நிர்மாணத்திற்காக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா செலவிட்டுள்ளோம். இந்த நாட்டில் சிறைச்சாலைகளை திறப்பதைவிட, புனர்வாழ்வு நிலையங்களை திறப்போம் என ஜனாதிபதி இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரவு - செலவுத்திட்டத்தின்போது தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் தான் நாம் இந்தப் பணிகளை எல்லாம் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றோம்.

சிறைக்கைதிகளாக இருந்தபோதிலும், உங்களது வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். மனிதர்கள் என்ற ரீதியில் பிழைகளை திருத்திக்கொண்டு சட்ட ரீதியாக, நீதிமன்றம் ரீதியாக உங்களுக்கு எவ்வளவு விரைவாக வீடுகளை நோக்கிச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாக வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்று எமக்கும் ஆர்வமாக உள்ளது. அதற்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தோடும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உட்பட அரசாங்க அதிகாரிகள் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

இது மாத்திரமின்றி யுத்தத்தின்போது, போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 12,000 முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு செய்து மறுவாழ்வு செய்து மீண்டும் சமூகத்தில் ஒப்படைக்கும் பணியை இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் சார்பாக வெற்றிகரமாக செய்துள்ளோம். அத்துடன், அந்த 12,000 பேரும் புனர்வாழ்வு பெற்று வெளியேறும்போது அவர்களுக்கு சுயதொழிலை மேற்கொள்வதற்கு கடன் உதவிகளை அளித்து வருகின்றோம். அவ்வாறான கடன் உதவிகளை வங்கிகளின் ஊடாக வழங்கும்போது நூற்றுக்கு நான்கு வீத வட்டி மட்டுமே அறவிடப்படுகின்றது. இரண்டரை இலட்சம் ரூபாவாக வழங்கப்படும் கடனை பத்து வருடங்களில் மீளச்செலுத்தும் நடைமுறை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது'என்றார்

No comments:

Post a Comment