ராமேஸ்வரம்:கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழா, இந்திய, இலங்கை ராணுவ பாதுகாப்புடன் நேற்று நடந்தது. முதன்முறையாக, இலங்கை ராணுவம் வாணவேடிக்கை நிகழ்த்தி, உரிமையை நிலை நாட்டியது. ராமேஸ்ரவரத்தில் இருந்து, 14 நாட்டிக்கல் மைல்(26 கி.மீ.,) தூரத்தில், நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சச்தீவு. இங்குள்ள அந்தோணியார் ஆலய விழாவை, இந்தியா, இலங்கை பக்தர்கள் பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையில் உள்நாட்டு போர் ஏற்பட்டதால், பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த விழா, 2010ம் ஆண்டு முதல், இரு நாட்டு அரசுகளின் அனுமதியுடன் நடந்து வருகிறது. இந்தாண்டு, கச்சத்தீவு விழாவில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, 100 படகுகளில் 2,814 பேரும், இலங்கையில் இருந்து, 208 படகில் 2,381 பேரும், நேற்று முன்தினம் கச்சத்தீவிற்கு வந்தனர். முன்னதாக, ராமேஸ்வரத்தில் நடந்த சோதனையின் போது, தமிழ் ஆர்வலர்கள் சிலர் கொண்டு வந்த "பிளக்ஸ் பேனர்'களை, போலீசார் பறிமுதல் செய்தனர். நடுக்கடலில் தமிழக கடலோர பாதுகாப்புபடை, இந்திய கடலோர காவல் படை, இந்திய கடற்படை, இலங்கை கடற்படையினர் சோதனையிட்டனர். நேற்று முன்தினம் மாலை, ஆலயத்தில் நடந்த சிலுவைப்பாதை, திருப்பலி, தேர்பவனி நடந்தது. திருப்பலி முடிந்த பின், முதல் முறையாக இரவில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய வாணவேடிக்கையை, பக்தர்கள் பார்த்து ரசித்தனர்.
யாழ்ப்பாணம் பிஷப் தாமஸ் சவுந்தர நாயகம் தலைமையில், நேற்று காலை 6:20 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. பின், இவர், கோயில் அருகே அமைக்கப்பட்ட அந்தோணியார் கெபியை திறந்து வைத்தார்.
இலங்கை அரசுக்கு நன்றி
இலங்கைக்கான, இந்திய தூதரக அதிகாரிஅசோக் காந்தா கூறுகையில், கச்சத்தீவு விழாவில், இருநாட்டு பக்தர்களும் பங்கேற்று சிறப்பித்தது, மகிழ்ச்சியளிக்கிறது. விழாவிற்கு, பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்த இலங்கை அரசுக்கு நன்றி. கடந்த ஆண்டை விட, இந்தாண்டில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள், இந்த விழாவில் பங்கேற்க முடிவெடுக்கும் அதிகாரம் இலங்கை அரசிடம் தான் உள்ளது. கொழும்பு சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேரை மீட்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் விடுவிக்கப்படுவர்.

No comments:
Post a Comment