Friday, February 22, 2013
ஜம்மு::ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சொற்பொழிவாற்ற சென்ற விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா, ஜம்மு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 6 முக்கிய நகரங்களில் சொற்பொழிவாற்றுவதற்காக பிரவீன் தொகாடியா 2 நாள் பயணமாக நேற்று அம்மாநிலத்திற்கு சென்றார். அவரை வரவேற்பதற்காக அம்மாநில விஸ்வ இந்து பரிஷத் தலைவர் ராமகந்த் துபே தலைமையில் ஏராளமான தொண்டர்கள் ஜம்மு விமான நிலைய வாசலில் காத்திருந்தனர்.
பிரவீன் தொகாடியா விமானத்தில் இருந்து இறங்கியதும் அவரை தடுத்து நிறுத்திய போலீசார், சிறிது நேரத்திற்கு பின்னர் அவரை புதுடெல்லி செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனையறிந்த விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் விமான நிலைய வாசலில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜம்மு மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் பிரவீன் தொகாடியா கடந்த ஆண்டு மதச்சொற்பொழிவு ஆற்றினார். அவரது பேச்சை தொடர்ந்து அப்போது ஏற்பட்ட கலவரங்களை கருத்தில் கொண்டு, இம்முறை அவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் வந்தால் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பிரவீன் தொகாடியா திருப்பி அனுப்பப்பட்டார் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment