Pages

Thursday, February 21, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கப்படும் - ரஸ்யா!

Thursday, February 21, 2013
இலங்கை::மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரும் சகல பிரே ரணைகளையும் தோற்கடிப்பதற்கு ரஷ்யா இலங்கைக்குப் பூரண ஒத்துழைப்பினை வழங்குமென இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர், பிரதமர் டி. எம். ஜயரத்னவிடம் உறுதியளித்துள்ளார்.


மேற்குலக நாடுகளின் அழுத்தங்கள் தொடர்பில் இலங்கையில் உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள ரஷ்யத் தூதுவர், மனித உரிமை கவுன்ஸிலின் நிரந்தர உறுப்புரிமையை ரஷ்யா கொண்டிராவிட்டாலும் இலங்கைக்குத் தேவையான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற பிரதமர் டி. எம். ஜயரத்னவுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, நான்கு ஹெலிகொப்டர்கள் உட்பட பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை இலங்கைக்கு வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இது தொடர்பில் புரிந்தணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பிரதமர் டி. எம். ஜயரட்னவிற்கும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அலெக்சாண்டர் சார்ச்சலாவுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையின் பாதுகாப்புக்கும் இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கும் ரஷ்யா பூரண ஒத்துழைப்பினை வழங்கும் எனவும் ரஷ்யத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு பிரதமரின் வாசஸ்தலமான விசும்பாயவில் நேற்று முற்பகல் நடைபெற்றதுடன் இரு நாடுகளுக்கும் பயன் தரக்கூடிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

No comments:

Post a Comment