Pages

Tuesday, October 30, 2012

நியூ ஜெர்சியை தாக்கியது சாண்டி புயல் : மக்கள் தவிப்பு!

Tuesday, October 30, 2012
நியுயார்க்::அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை சேண்டி புயல் தாக்கியதில் மணிக்கு 90 மைல் கி.மீ. சூறாவளி வீசியதில் கடல் அலைகள் 13 அடி உயரத்துக்கு எழும்பி கரையை தாக்கின. கன மழையில் நியூயார்க் நகரில் வெள்ளம் சூழ்ந்தது. மின்சாரம், ரயில், பஸ், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புயல் காரணமாக நேற்று 3 பேர் பலியாயினர். இதனால் பல மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கரீபியன் கடலில் உருவான சேண்டி புயல், ஜமைக்கா, கியூபாவை தாக்கியது. இதில் 65 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சேண்டி புயல் அமெரிக்காவை நோக்கி நகர்ந்தது. நேற்றிரவு புயல் தரையை நெருங்கியது. அப்போது 90 மைல் கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. நியூஜெர்சியை புயல் தாக்கியது. மரம் விழுந்து ஒருவர் பலியானார்.

விபத்தில் 2 பேர் பலியாயினர். பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நகரில் சுரங்க பாதைகள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  நியூயார்க் நகரிலும் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 12 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அத்துடன், மெட்ரோ ரயில்கள், பஸ் போக்குவரத்து, மின்சாரம் நிறுத்தப்பட்டன. இதனால் மின்சாரம் இன்றி நியூயார்க் நகரமே இருளில் மூழ்கியது. வெள்ளம், மின் தடை காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வடக்கு கரோலினா முதல் கனெக்டிகட் வரையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்று நியூயார்க் நகர மேயர் மைக்கேல் புளூம்பெர்க் நேற்றே முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு கால வரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் சென்டர்கள் தியேட்டர்கள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் நியூயார்க் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. நகரில் உள்ள ஐ.நா. அலுவலகம் உள்பட வெளிநாட்டு அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. தற்போதைய அதிபர் ஒபாமாவும், குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். புயல் காரணமாக அவர்கள் பிரசாரத்தை ரத்து செய்தனர். இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. சேண்டி புயல் காரணமாக அமெரிக்காவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் அட்லாண்டிக் கடல் பகுதியில் இன்று கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment