Sunday, April 8, 2012

ஈஸ்டர் பண்டிகை கோலாகலம் : கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

Sunday, April, 08, 2012
சென்னை::ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் இன்று கோலாகலமாக கொண்டாடினர். கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு துவங்கி இன்று அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பெருநாள், உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஈஸ்டருக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலம் ஆகும். கடைசி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளான நேற்று முன்தினம் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பாதம் கழுவுதல் மற்றும் சிலுவை பாதை நிகழ்ச்சிகள் நடந்தன.

இயேசு உயிர்த்தெழுந்த நாள் இன்று ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இரவு 11 மணிக்கு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் தொடங்கின. முதலில் பாஸ்கா திரி மந்திரித்தல், தீபம் ஏற்றி பவனியாக எடுத்து செல்லுதலுடன் வழிபாடுகள் தொடங்கின. தொடர்ந்து கூட்டு திருப்பலி நடந்தது. சிஎஸ்ஐ தேவாலயங்களில் இன்று அதிகாலை 4 மணிக்கு பிரார்த்தனை நடந்தது. தேவாலயங்களில் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் நடந்த கூட்டு திருப்பலியில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா ஆலயத்தில் நடந்த பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சென்னையில் சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம், ராயப்பேட்டை சிஎஸ்ஐ, பெரம்பூர் லூர்து மாதா, செயின்ட் தாமஸ் மவுன்ட் புனித தோமையர் ஆலயம் உள்பட அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

No comments:

Post a Comment