Pages

Tuesday, April 24, 2012

பசி கொண்ட ஓநாய்களுக்கு பௌர்ணமி தின முழு நிலாப் போன்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு ,தமிழ் ஈழம், இருக்கின்றது - இந்து பத்திரிகை!

Tuesday, April, 24, 2012
சென்னை::பசி கொண்ட ஓநாய்களுக்கு பௌர்ணமி தின முழு நிலாப் போன்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு ,தமிழ் ஈழம், இருக்கின்றது என்று இந்து பத்திரிகை சாடியுள்ளது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டும் என்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் நிலையில் அதன் பின்னணி அர்த்தத்தையும் உணர்வையும் தமிழக அரசியல் கட்சிகள் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

அவர்கள் உரத்து ஊளையிடுவது தொலைவிலுள்ள ஈழக்கனவுக்கான அழுகை அல்ல. ஆனால் இங்கு இப்போதுள்ள அரசியலின் அவசரத்தளமாக இருப்பதன் அறிகுறியாக காணப்படுகிறது.

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு தனிநாட்டை உருவாக்குவதற்கான அழைப்பை தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. வின் தலைவருமான மு. கருணாநிதி கடந்த வாரம் விடுத்திருந்தார்.

மொன்ரனிகிரோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், கொசோவோ போன்ற நாடுகளை அடியொற்றியதாக தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்ற அழைப்பு கருணாநிதியால் விடுக்கப்பட்டிருக்கிறது.

சிறுபான்மைத் தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வுடன் கூடிய இணக்கப்பாட்டை எட்டுமாறு இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்கு அப்பால் வெகு தொலைவிற்கு விலகிச் சென்று இந்த உணர்வுபூர்வமான விடயத்தை தமிழ்நாட்டில் அரசியல் மயப்படுத்துவதற்கு மேலும் கருணாநிதி தீனி போடுவதாக தென்படுகிறது.

இலங்கைத் தமிழர்களின் அரசியல், பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு ஐ.நா.வை ஒரு கருவியாக மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகள் மிகவும் நியாயமான வழியில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ஜெனீவாவில் அண்மையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட போது இந்தியாவின் நிலைப்பாட்டை வடிவமைப்பதில் மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகளின் அழுத்தமானது சிறிய அளவினதானதொன்று அல்ல. ஆனால் இனங்களின் அடிப்படையில் இலங்கையில் பிரிவினைக்காக ஐ.நா. சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டுமென்ற பரிந்துரையை முன்வைப்பதானது.

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சர்வதேச ரீதியாக முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தயக்கமின்றி எதிர்ப்பதற்கான விளைவை மட்டுமே இது கொண்டிருக்கும்.

இலங்கைத் தமிழர்கள் ஏற்கனவே மோசமான நிலைமையில் இருக்கின்றனர். இந்நிலையில் நியாயமற்ற கோரிக்கைகளையும் பரிந்துரைகளையும் இலங்கைத் தமிழர்களின் சார்பாக வெளிப்படுத்துவதானது சிறிய அளவு அனுகூலத்தை வென்றெடுப்பதிலும் பார்க்க நிலைமையை மோசமாக்குகின்றது.

கொசோவோ, மொன்ரனிகிரோ, தெற்கு சூடான் அல்லது கிழக்கு திமோரை இலங்கைக்கு எந்த விதத்திலும் ஒப்பிடக் கூடியதாக இல்லை. சர்வஜன வாக்கெடுப்புகள் அல்லது வெளிமட்டத் தலையீடுகளின் மூலம் புதிய தேசங்கள் உருவாக்கப்பட்ட உதாரணங்களை மட்டுமே கருணாநிதி பார்க்கின்றார்.

இலங்கைத் தமிழர்களின் துன்பங்களுக்கு தீர்வு காண்பதற்காக அதனை நம்பிக்கையளிக்கும் வகையில் வலுவானதாக உருவாக்கும் விடயத்தை அவர் நாடியிருக்கவில்லை. 2000 ஆம் ஆண்டு அரசியல் ரீதியான பிரிவினையை ஏற்படுத்துவதற்கான முன்னுதாரணமொன்றை அவர் குறிப்பிட்டிருந்தார்.

செக்கோசிலாவாக்கியா பற்றி அவர் உதாரணம் காட்டியிருந்தார். செக்கோசிலாவாக்கியாவானது செக் குடியரசாகவும் சிலவாக்கியாவாகவும் பிரிந்திருந்தது. கருணாநிதியின் வார்த்தைகளில் இந்த விடயமானது, குருதி சிந்தாத பிரிவினையாகும்.

கடுமையான வேறுபாடுகள், பிளவுகள் நிலவும் நாடொன்றின் மோதலுக்கு சமாதானமான தீர்வாக அவர் இந்த முன்னுதாரணத்தை குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் அர்த்தமெதுவும் இல்லாமல் தமிழ் நாட்டில் ஆரவாரத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இலங்கைத் தமிழர் விவகாரத்தை இந்திய மத்திய அரசிடம் எழுப்புவதற்கு தி.மு.க. தலைவர் சிறப்பான முறையில் செயற்பட முடியும்.

நீண்டகாலமாகத் துன்பப் பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு துரிதமான பெறுபேறை ஏற்படுத்தக் கூடிய விதத்திலான வெளியுறவுக் கொள்கையை வகுப்பதற்கு மௌனமாகவோ அல்லது இதர வழியிலோ கருணாநிதி உதவமுடியும்.

இலங்கையின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் அதே சமயம் அங்குள்ள தமிழர்களுக்கு விரைவான பெறுபேறுகளை எட்டக் கூடிய விதத்திலான வெளியுறவுக் கொள்கையை வழங்குவதற்கு கருணாநிதி உதவ வேண்டும்.

நல்நோக்கங்களுடன் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை நாடும் திடமான நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. இதன் பின்னணியிலுள்ள அர்த்தத்தை தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment