Thursday, April 5, 2012

இலங்கைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உதவாது - கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சத்திராங்கனி!

Thursday, April 05, 2012
கனடா::இலங்கைக்கு எதிரான சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுக்கள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க உதவாது என கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சத்திராங்கனி வாகீஸ்வர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் தீவிரவாதிகள் தலைதூக்க இலங்கை மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என கனேடிய பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் இருந்து வெளியாகும் ´தி ஸ்டார்´ என்ற பத்திரிகை இலங்கை குறித்து எழுதியுள்ள தலைப்புக்கள் தவறானதும் கடுமையானதும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உள்நாட்டு தயாரிப்பு எனவும் கடந்த காலங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் மீண்டும் இடம்பெறாது தடுப்பது மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இக்குழுவின் நோக்கம் எனவும் சத்திராங்கனி வாகீஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் பரிந்துரைபடி பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், வாழ்வாதார வளர்ச்சி என்பன செய்யப்பட்டு வருவதோடு அரசியல் தீர்வு காண பேச்சுவார்த்தையும் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

30 வருட கால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் அதன் மக்களுடன் இணைந்து நல்லிணக்கம் மற்றும் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சத்திராங்கனி வாகீஸ்வர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment