Wednesday,April,11,2012இலங்கை::இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹணவிற்கு எதிராக போர் குற்ற விசாரணை நடத்தும்படி அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ள கலாநிதி பாலித கொஹண, போர் குற்றம் புரிந்தமைக்கான ஆதாரங்களை அவுஸ்திரேலிய தமிழ் அமைப்பு ஒன்று கூட்டாட்சி பொலிஸாரிடம் சமர்பித்துள்ளதாக, அண்மையில் புலி சார்பு இணையம் ஒன்றை மேற்கோள்காட்டி ஏஎப்பி செய்தி வெளியிட்டிருந்தது.
இது தொடர்பில் அத தெரண அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸிடம் மின்னஞ்சல் மூலம் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தது.
அத தெரணவின் கேள்விக்கு இன்று (11) மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ள அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸ் பேச்சாளர், பாலித கொஹண தொடர்பில் கடந்த மார்ச் 8ம் திகதி தமக்கு ஆவணம் ஒன்று கிடைக்கப்பெற்றதாக உறுதி செய்துள்ளார்.
குறித்த ஆவணத்தை தற்போது ஆய்வு செய்து வருவதால் மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸ் பேச்சாளர் அத தெரணவுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலித கொஹணவுக்கு எதிராக 32 பக்கங்கள் அடங்கிய போர் குற்ற ஆணவத்தை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் ஊடாக "இலங்கையின் இறுதிக் கட்ட போரின்போது இடம்பெற்ற ஒரு கூட்டு குற்றவியல் சம்பவம் தொடர்பில் பாலித கொஹண மீது விசாரணை நடத்தவும்" என்ற தலைப்பில் அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸாரிடம் தமிழ் அமைப்பு சமர்பித்துள்ளது.
இந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை மூன்று முக்கிய அம்சங்களில் ஆராயும் அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸார் அது குறித்து விசாரணை நடத்துவதா இல்லையா என்பதை பின்னர் தீர்மானிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment