Pages

Thursday, March 29, 2012

இந்தியாவோ ஏனைய மேற்குலக நாடுகளோ இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது - சம்பிக்க ரணவக்க!

Thursday,March,29,2012
இலங்கை::நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த முடியாது. இந்தியாவோ ஏனைய மேற்குலக நாடுகளோ இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இலங்கை ஒரு சுயாதீன நாடு. எனவே அந்நிய நாடுகளின் அழுத்தங்களுக்கோ வழி நடத்தல்களுக்கோ அடிபணிய வேண்டிய தேவை இலங்கைக்கு கிடையாது. உள்நாட்டு விடயங்கள் தொடர்பில் தேசிய பொறிமுறைகள் பொறுப்புடன் செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில்,

2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் நடைபெற்ற உள்நாட்டு போருடன் தொடர்புடைய சம்பவங்களை ஆராய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய ஆணைக்குழு தனது வரையறையை மீறிச் செயற்பட்டுள்ளது. எனவே அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எந்தளவிற்கு ஏற்றுக் கொள்ள முடியும் என்பதும் கேள்விக்குறியான விடயமாகும்.

எவ்வாறாயினும் ஜெனீவா தீர்மானத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முக்கிய இடம்பிடித்துள்ளது. இப் பரிந்துரைகளை முழு அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மேற்குலக நாடுகள் வலியுறுத்துகின்றன. இதற்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து கொண்டு செயற்படுகின்றன.

போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு உள்ளூர் பொறிமுறையே தேவைப்படுகின்றது. அது மட்டுமின்றி இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் அந்நிய நாடுகளின் ஆதிக்கத்தை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

அதேபோன்று பரிந்துரைகளை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடியாது என்றார்.

No comments:

Post a Comment