Pages

Wednesday, March 28, 2012

இலங்கை தேசிய இனங்களின் நல்லிணக்கத்திற்காகவே ஜெனீவா தீர்மானம்: அமெரிக்க நிலையத்தின் பணிப்பாளர் - கிறிஸ்டோபர் ரீல்!

Wednesday,March,28,2012
இலங்கை::ஜெனிவாவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமானது இலங்கையில் தேசிய இனங்கள் நீண்டகால நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் ஜனாதிபதியின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை முழுமையாக வாசித்துப் புரிந்து கொள்ளாதவர்களே இதுசம்பந்தமான பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள் என கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையத்தின் பணிப்பாளர் கிறிஸ்டோபர் ரீல் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இவர், உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளைச் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இச்சந்திப்பின் போது கல்வி கலாசார விடயங்கள், பற்றிக் கலந்துரையாடப்பட்டதுடன், ஜனாதிபதியின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை. ஜெனாவா மாநாட்டின் தாக்கம், உள்ளூர் பாதுகாப்பு நிலைமைகள் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

அமெரிக்க நிலையத்தின் பணிப்பாளருடன், நிலையத்தின் கலாசார உத்தியோகத்தர் கொன் சலர்ஸ், அதிகாரி சாமினி சின்னையா ஆகியோரும் கலந்து கொண்டனர். இச்சந்திப்பினை இலங்கை எஸ்.டி.ஏ சொலிடாறிட்டி நிறுவனத்தின் தலைவர் கமல்தாஸ் ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்க நிலையத்தின் பணிப்பாளர் கிறிஸ்டோபர் ரீல், 'இலங்கையில் தேசிய நல்லிணக்கம் உருவாவதற்கான பங்களிப்புக்கு அமெரிக்க நிலையம் தயாராக உள்ளது. ஜெனிவாவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமானது இலங்கையில் தேசிய இனங்கள் நீண்டகால நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டது.

அமெரிக்காவுக்கு தேசிய நல்லிணக்கம் தொடர்பில் உலகில் பல நாடுகளில் அனுபவம் உண்டு, பெருநாட்டில் இதே விதமாக 15 வருடமாக நீடித்த மோதலுக்குப் பின்னர் உண்மை கண்டறியும் குழுவின் முயற்சியின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்கம் இன்றும் நீடிக்கிறது.

இளைஞர்களுக்கான அபிவிருத்தி தொடர்பான நிதிகள் ஒதுக்கப்படும் போது, மட்டக்களப்பு சார் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் கூடுதலாக பங்குபற்ற வேண்டும். அமெரிக்காவுடனான மாணவர் பரிமாற்றத் திட்டத்தில் கூடுதலாக பங்கெடுக்க வேண்டும். அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்து அறிஞர்கள் பணிபுரிய வேண்டும். அத்துடன் இலங்கையிலிருந்து அதிகமானவர்கள் அமெரிக்கா சென்று கல்வி கற்க வேண்டும்.

அதே நேரம் சுற்றுலாத் துறைசார்ந்த விடயத்தில் சிறிய, நடுத்தர தொழில்துறைகளை ஆரம்பிப்பதற்கு அமெரிக்கா அதிகளவான அக்கறை கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அத்துடன், உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள், ஆங்கில ஆசிரிய பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு 84 ஆம் ஆண்டில் ஆங்கில ஆசிரியர்களை உருவாக்கும்திட்டம் அமுல் படுத்தப்பட்டது போல் மீண்டும் ஒரு பயிற்சித்திட்டத்தினை உருவாக்கித்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதற்காக அமெரிக்க வள நிலையம் ஒன்றை மட்டக்களப்பில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், பொருத்தமான இடம் ஒன்றனை அடையாளப்படுத்தித் தருமாறும் அமெரிக்க நிலையத்தின் பணிப்பாளர் கிறிஸ்டோபர் ரீல் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment