Pages

Thursday, March 1, 2012

சர்ச்சைக்குரிய விளம்பரத்தால் கொதிப்பு தினத்தந்தி நாளிதழ் எரித்து முஸ்லிம்கள் போராட்டம்!

Thursday, March 01, 2012
வேலூர்::சர்ச்சைக்குரிய விளம்பரம் வெளியானதை கண்டித்து வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தில் தினத்தந்தி நாளிதழை எரித்து முஸ்லிம்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. அதிமுக மேற்கு மாவட்ட விவசாய அணி சார்பில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ஆம்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதற்காக தினத்தந்தி, தினமலரில் மேற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கடேசன் விளம்பரம் கொடுத்திருந்தார். அதில், நபிகள் நாயகத்தையும் ஜெயலலிதாவையும் ஒப்பிடும் விதமாக வாசகங்கள் இடம் பெற்றிருந்தது, முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் நேற்று மாலை 6 மணியளவில் தொழுகை முடிந்து வெளியே வந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மேல்விஷாரம் பைபாஸ் சாலை சந்திப்பில் திரண்டு தினமலர், தினத்தந்தி நாளிதழ்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தாங்கள் கொண்டு வந்திருந்த தினத்தந்தி நாளிதழ்களை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பதற்றமான சூழ்நிலை நிலவியதால் ஏடிஎஸ்பி முருகேசன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment