Pages

Monday, February 6, 2012

கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. இணைந்து இருக்கிறது: திருமணவிழாவில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பரபரப்பு பேச்சு!

Monday, February 06, 2012
குறிஞ்சிப்பாடி::குறிஞ்சிப்பாடி வட்டம் பெரியகாட்டு சாகை தி.மு.க. செயலாளர் விவேகானந்தன் சகோதரர் பாலமுருகனுக்கும், வசனாங்குப்பம் கனகசெல்வராசு மகள் சுதா ஆகியோருக்கு, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆயிரவைசியர் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

தே.மு.தி.க. அவைதலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள். எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வாழ்த்தி பேசியதாவது:-

இந்த திருமணம் தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் சம்பந்தம் கொள்கிற திருமணம். மணமகள் தே.மு.தி.க. சட்டமன்ற துணைதலைவர், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனின் தாய் மாமன் பேத்தி ஆவார். மணமகன் தி.மு.க. கிளை கழக செயலாளர் விவேகானந்தன் சகோதரர் ஆவார். ஆகவே, கடலூர் மாவட்டத்தில் இன்றைய தினம் தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் இணைகிறது.

இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்கள் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டசபை மரபை மீறி சஸ்பெண்டு செய்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்த அவையிலே கூடியிருக்கின்ற தாய்மார்களும், பெரியோர்களும், குறிஞ்சிப்பாடி தொகுதியை சேர்ந்தவர்கள். உங்கள் முகங்களை பார்க்கும்போது சட்டமன்ற தேர்தலில் நீங்கள் செய்த தவறை உணர்ந்து வருத்தப்படுவதாக தெரிகிறது. தர்மம் வெல்லும், என்னதான் தானே தாக்கியிருந்தாலும், நம்மை நாமே காத்துகொள்ளும் காலம் வெகு விரைவில் மலரும்.

இவ்வாறு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் பேசும்போது தனக்கே உரிய பாணியில் அரசியலை தவிர்த்துவிட்டு, தனது உறவினர்களான மணமக்களை வாழ்த்தி மட்டும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணவிழாவில் தி.மு.க. மாவட்ட அவைதலைவர் தங்கராசு, ஒன்றிய செயலாளர் சிவகுமார், மாவட்ட இலக்கிய அணி அகரம் நாராயணசாமி, நகர இளைஞரணி ராஜா, சின்னதானங்குப்பம் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். குள்ளஞ்சாவடி தி.மு.க. செயலாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment