Sunday, February 12, 2012அருப்புக்கோட்டை::என் மீது பொய் வழக்குகள் போட்டால் ஜெயலலிதா பற்றிய கதைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன் என்று விஜயகாந்த் கூறினார்.விருதுநகர் மாவட்ட தேமுதிக பொருளாளர் சங்கரலிங்கம் இல்ல திருமண விழா அருப்புக்கோட்டையில் இன்று நடந்தது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: சட்டசபையில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். மக்கள் பிரச்னை பற்றி பேசியதற்காக என்னை சஸ்பெண்ட் செய்துள்ளனர். அவர்கள் கூச்சலிடும்போது நாங்கள் சும்மா இருக்க முடியாது. எந்த ஆண் மகனாக இருந்தாலும் ஆத்திரம் வரத்தான் செய்யும். சபை நாகரிகம் எனக்கும் தெரியும்.
26 மந்திரிகள் அடங்கிய 34 பேர் கொண்ட குழுவை சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு நியமித்துள்ளனர். தானே புயல் பாதிப்பைச் சரிசெய்ய மந்திரிகள் குழு அமைத்தீர்களா?
சங்கரன்கோவிலில் தற்போது மிக்சி, கிரைண்டர் கொடுக்கின்றனர். எதுவேண்டுமானாலும் கொடுக்கட்டும். மின்சாரம் இருந்தால்தானே ஓடும். விஜயகாந்தை அரட்டி பார்க்க முடியாது. என் மீது பொய் வழக்கு போட நினைத்தால், இன்னும் வேறு மாதிரியாக பேசுவேன். டான்சி ஊழல் வழக்கில் கையெழுத்தை நான் போடவில்லை என்றீர்கள். ஆனால் இடத்தை திருப்பி கொடுக்கிறேன் என்றீர்கள். அது எப்படி முடியும்? சொத்துக் குவிப்பு வழக்குக்காக 13 ஆண்டுகளாக நடையாய் நடந்துகொண்டு இருக்கிறீர்கள். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக உங்களை பற்றிய கதைகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன். சங்கரன்கோவில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே வேட்பாளரை அறிவித்து குழுக்கள் அமைத்துள்ளீர்கள். உங்களுக்கு இடைத்தேர்தல் பயம் வந்து விட்டது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
No comments:
Post a Comment