Pages

Thursday, February 2, 2012

புனேயில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ராணுவ அதிகாரிகள்!

Thursday, February 02, 2012
புனே::புனேயில் போக்குவரத்து விதிகளை மீறிய ராணுவ அதிகாரிகளை தட்டிக்கேட்ட போலீசார் தாக்கப்பட்டனர். மகாராஷ்ட்ர மாநிலம் புனேயில் ராணுவ கல்லூரியைச் சேர்ந்த அதிகாரிகள் இருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்கள் நோ எண்ட்ரி பகுதியில் நுழைந்தபோது போக்குவரத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்க முயன்றனர். இதையடுத்து ராணுவ அதிகாரிகளுக்கும் போக்குவரத்து போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதில் போக்குவரத்து போலீசாரை ராணுவ அதிகாரிகள் தாக்கினர். இதையடுத்து அங்கு போலீஸ் குழு வர, 30 க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகளும் அங்கு வந்தனர். ராணுவ அதிகாரிகள் வந்ததும் அருகில் உள்ள காவல் நிலையத்தை தாக்கியதுடன் அங்கிருந்த போலீசாரையும் அடித்து நொறுக்கினர். தாக்கப்பட்ட போலீசாரில் 2 பெண் ஏட்டுக்களும் இருந்தனர். மோதலை தடுக்க வந்த பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களையும் ராணுவ அதிகாரிகள் தாக்கினர். ராணுவம் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தலையிட்ட பிறகே பிரச்சனை முடிவுக்கு வந்தது. ராணுவ அதிகாரிகள் போக்குவரத்து ஏட்டுக்களை தாக்கியது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று துணை கமிஷனர் சஞ்சய் யாதவ் தெரிவித்தார். இதுபோன்ற ஒழுங்கீன செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவ உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சிங் தெரிவித்தார்.

No comments:

Post a Comment