Pages

Tuesday, January 31, 2012

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் த.தே.கூ. சாட்சியமளித்தால் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்!

Tuesday, January 31, 2012
இலங்கை::ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சாட்சியமளித்தால் உள்நாட்டின் நீதிமன்றம் ஊடாக ஆயுள்கால சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையை சர்வதேச விசாரணை பொறிமுறையில் சிக்கவைக்க அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் சூழலை அமைத்து விட்டன. இதிலிருந்து தப்பிக்க வேண்டுமாயின் ஒன்றிணைந்து கடுமையாக போராட வேண்டும் என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் அமைப்பாளரும் செயலாளருமான வசந்த பண்டார கூறுகையில்,

இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகள் தற்போதுவெளியில் வர ஆரம்பித்துள்ளன. அரசாங்கத்தை அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் இராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகள் தற்போது தீவிரம் கண்டுள்ளது. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் என இந்தியாவின் தலைமையில் உள்நாட்டில் பேசும் போதே அதனை நிறுத்தியிருக்க வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழு அநாவசியமாக தேசிய அரசியல் விடயங்களை பேசப் போய் அது நாட்டிற்கு ஆபத்தாகி விட்டது. எதிர்வரும் மார்ச் மாதத்திலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவான விசாரணைகளை சர்வதேச சமூகம் வலியுறுத்தும்.

அதேபோன்று இதுவரை காலமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாட்டிற்கோ தமிழ் மக்களுக்கோ நன்மை ஏற்படுத்தும் வகையில் செயற்படவில்லை. இவர்களே போலியான தகவல்களை சர்வதேசத்திற்கு பரப்பி வருகின்றனர். மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தால் கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment