Pages

Wednesday, January 4, 2012

பெண் டாக்டர் படுகொலை : மாநிலம் முழுவதும் டாக்டர்கள் இன்று ஸ்டிரைக்!

Wednesday,January,04,2012
தூத்துக்குடி: சிகிச்சையின்போது கர்ப்பிணி மனைவி இறந்ததால் பெண் டாக்டரை வெட்டிக் கொலை செய்த ரவுடி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி 3வது மைல் காமராஜர் நகரை சேர்ந்த பேராசிரியர் திருஞானசம்பந்தம் மனைவி சேதுலட்சுமி(55). இவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் தலைமை டாக்டராக பணியாற்றினார். மேலும் தனியாக மருத்துவமனையும் நடத்தி வந்தார். இவரது மகள் பூரணசந்திரிகா அமெரிக்காவில் டாக்டராக உள்ளார். மகன் கோபிநாத் டெல்லியில் ஐஏஎஸ் படித்து வருகிறார்.

தூத்துக்குடி ஆவுடையார்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மகேஷ்(28). ஆட்டோ டிரைவராகவும் உள்ளார். இவரது மனைவி நித்யா(24). ஐந்து மாத கர்ப்பிணியான நித்தியாவுக்கு கடந்த 30ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சேதுலட்சுமியின் மருத்துவமனையில் மகேஷ் சேர்த்தார். பரிசோதனையில் நித்தியாவின்
வயிற்றுக்குள் இருக்கும் சிசு இறந்து விட்டதால் ஆபரேஷன் செய்து அகற்ற வேண்டும் என டாக்டர் சேதுலட்சுமி கூறினார். அறுவை சிகிச்சைக்கு பிறகு
நித்யாவின் உடல் நிலை மிகவும் மோசமானதால் மற்றொரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு நித்யா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த மகேஷ், டாக்டர் சேதுலட்சுமியிடம் தகராறில் ஈடுபட் டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மகேஷை எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ராஜா(27), அப்பாஸ்(27), குருமுத்து(27) ஆகியோருடன் சேதுலட்சுமியின் மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர் சேதுலட்சுமி அறைக்குள் நுழைந்த மகேஷ் நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டர் சேதுலட்சுமியை அரிவாளால் கொடூரமாக வெட்டினார். இதில் துடிதுடித்து சேதுலட்சுமி இறந்தார். தடுத்த ஊழியர் வள்ளிக்கும் வெட்டு விழுந்தது.

தகவல்அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். தனிப்படையினர் நேற்று காலை குருமுத்து, அப்பாஸ் மற்றும் ராஜாவை கைது செய்தனர்.

மேலும் மதுரைக்கு தப்ப முயன்ற மகேஷையும் போலீ சார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பிரபல ரவுடியான மகேஷ் மீது 2006ல் ஒரு கொலை வழக்கு, 2008ல் ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. டாக்டர்கள் வேலை நிறுத்தம்: டாக்டர் சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி அரசு டாக்டர்கள் அறுவை சிகிச்சை தவிர மற்றவை பணிகளை செய்ய மாட்டோம் என அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய கூறி கறுப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக சென்று தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி: டாக்டர் சேது லட்சுமி கொலையை கண்டித்து கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் 19 டாக்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாநிலம் முழுவதும் இன்று டாக்டர்கள் ஸ்டிரைக்

நாகர்கோவிலில் இது குறித்து அகில இந்திய மருத்துவ சங்க மாநில பொது செயலாளர் டாக்டர் ஜெயலால் கூறுகையில், ‘‘தூத்துக்குடியில் டாக்டர் சேதுலட்சுமி

கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கிறோம். தமிழ்நாட்டில் மருத்துவர்கள் மற்றும்

மருத்துவமனைகள் மீது பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. தற்போது கொலை நடந்துள்ளது. எனவே மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனே அமல் படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றன. ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்‘‘ என்றார்.

No comments:

Post a Comment