Pages

Saturday, December 31, 2011

வடக்கு கிழக்கு அதிகாரப் பகிர்வு தொடர்பில் UNPகட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஜயலத் ஜயவர்தன வெளியிட்டுள்ள கருத்து நகைப்பிற்குரியது-கெஹலிய ரம்புக்வெல்ல!

Saturday,December,31,2011
இலங்கை::வடக்கு கிழக்கு அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஜயலத் ஜயவர்தன வெளியிட்டுள்ள கருத்து நகைப்பிற்குரியது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் வடக்கு கிழக்கை புலிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஜயலத் கொண்டிருந்தார் என அமைச்சர் கெஹலிய சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஜயலத் ஜயவர்தன இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதில் ஆச்சரியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்காது 13ம் திருத்தச் சட்ட மூலத்தின் ஏனைய விடயங்களை அமுல்படுத்துவது என்பது தொடர்பில் நாட்டின் எல்லாத் தரப்பினரும் இணக்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தேசியக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு இவ்வாறான பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கான பிரதிநிதிகளை அரசாங்கம் ஏற்கனவே பெயரிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் அரசாங்கத்தின் வழியைப் பின்பற்றி தெரிவுக்குழுவிற்கான தமது பிரதிநிதிகளை பெயரிட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1985ம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தைகள் முதல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களில் உரிய அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை என அமைச்சர் ரம்புக்வெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் தீர்வுத் திட்டத்தை எட்டும் அரசாங்கத்தின் முனைப்புக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு - ஜயலத்தின் கருத்து UNPயின் நிலைப்பாடு அல்ல – காமினி ஜயவிக்ரம!

அதிகாரப் பகிர்வு தொடர்பில் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் ஜயலத் ஜயவர்தன வெளியிட்ட கருத்தை, கட்சியின் நிலைப்பாடாக கருத முடியாது என கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு பகிரப்பட வேண்டும் எனவும், அவ்வாறு பகிரப்படாவிட்டால் 13ம் திருத்தச் சட்ட மூலம் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் ஜயலத் ஜயவர்தன கோரியிருந்தார்.

காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும், இந்தக் கருத்தானது ஜயலத் ஜயவர்தனவின் தனிப்பட்ட கருத்து எனவும், கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல எனவும் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மிக முக்கியமான தேசியப் பிரச்சினை தொடர்பில் கட்சியின் செயற்குழுவே தீர்மானங்களை வெளியிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிப்பட்ட நபர்கள் கட்சியின் கொள்கைகள் பற்றி கருத்து வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் ஜயலத் ஜயவர்தனவின் கருத்தை, கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக கருத முடியாது என காமினி ஜயவிக்ரம பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment