Pages

Friday, December 2, 2011

தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி நடக்குது : தி.நகர் பொதுக்கூட்டத்தில் குஷ்பு பேச்சு!

Friday, December 02, 2011
சென்னை : தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி நடக்கிறது. ‘ஒய் திஸ் கொல வெறி’ என்று மக்கள் கேட்க தொடங்கிவிட்டனர் .ஜெயலலிதாவுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை’ என்று குஷ்பு பேசினார். பஸ் கட்டணம், பால் விலையை உயர்த்திய அதிமுக அரசை கண்டித்து சென்னை தி.நகர் பஸ் நிலையம் அருகில் பகுதி திமுக சார்பில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடந்தது. கே.ஏழுமலை தலைமை வகித்தார். ஜெ.கருணாநிதி, கோ.உதயசூரியன், பி.மாரி முன்னிலை வகித்தார். ஆ.துரை, ஆ.மணிமாறன், எம்.எஸ்.பழனி, இரா.பொன்னிவளவன் வரவேற்றனர். மாவட்ட செயலாளர் ஜெ.அன் பழகன் எம்எல்ஏ சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது:

இந்த ஆட்சியில் திமுகவினர் மீது ஒவ்வொரு நாளும் பொய் வழக்குகளை போடுகிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா ஏன் இப்படி பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுகிறார் என்று மக்களே கேட்கின்றனர். இந்த வேலையை தவிர வேறு எந்த வேலையும் அதிமுக ஆட்சியில் நடக்கவில்லை. மக்களுக்கு எந்த நல்ல திட்டத்தையும் அவர்கள் செய்யவில்லை. செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணமும் கிடையாது. மாற்றம் வேண்டும் என்று விரும்பி மக்கள் ஓட்டு போட்டார்கள். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஹிட்லர்போல ஜெயலலிதா ஆட்சி செய்கிறார். தான்சொல்வதுதான் சட்டம் என்கிறார். ஆட்சிக்கு வந்த உடனேயே முதலில் சமச்சீர் கல்வியில் கை வைத்தார். வாஸ்து பார்த்துவிட்டு புதிய தலைமை செயலகத்துக்குகூட போகவில்லை. மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்கிறோம். ஆனால், இவர் மூட நம்பிக்கையை வளர்க்கிறார்.

இலவச ஆடு, மாடு கொடுப்பதாக கூறிவிட்டு பால் விலையை ஏற்றிவிட்டார். தாய்மார்கள் ரத்த கண்ணீர் வடிக்கின்றனர். ஜெயலலிதா சொகுசு ஏசி காரில் உலா வருகிறார். ஆனால், ஏழை எளிய மக்கள் செல்லும் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். மக்கள் படும் கஷ்டம் அவருக்கு தெரியாது. ‘ஒய் திஸ் கொலவெறி’ என்று மக்கள் கேட்க தொடங்கி விட்டனர். மக்களுக்காக பாடுபடுவது திமுக தலைவரும் பொருளாளரும்தான். அவர்கள் மக்களின் கஷ்டங்களை தீர்க்க எப்போதும் குரல் கொடுப்பார்கள். இவ்வாறு குஷ்பு பேசினார். மாநகராட்சி மன்ற முன்னாள் ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் வெல்டிங் மணி, த.வேலு, மகேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment