Pages

Friday, December 2, 2011

இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண உருவாக்கியிருக்கும் நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் இடம்பெறமாட்டோம்-சம்பந்தன்!

Friday, December 02, 2011
இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண உருவாக்கியிருக்கும் நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் கலந்து கொள்ள வருமாறு விடுத்த அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்திருக்கிறது.

இது குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், அரசு, கூட்டமைப்புடன் வியாழனன்று நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, இந்த யோசனையை முன்வைத்ததாகவும், ஆனால், இரு தரப்புகளுக்கும் இடையே தற்போது நடந்து வரும் பேச்சு வார்த்தைகளின் முடிவில் காணப்படும் இணக்கப்பாடை, இந்த தெரிவிக்குழுவின் முன்னர் வைத்து, அதன் பின்னர் அந்தக் குழுவில் அதைப் பரிசீலிக்கும்போது அதில் பங்குபெறுவது குறித்து யோசிக்கலாம் என்று தாங்கள் கூறியதாகக் கூறினார்.

அரசு தரப்பில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆகிய இரு வழிமுறைகளுமே இணையாக நடக்கலாம் என்று கூறப்பட்டதா அல்லது, அரசு இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை, பேச்சுவார்த்தைகளுக்கு மாற்றாக முன்வைக்கிறதா என்று கேட்டதற்கு பதிலளித்த சம்பந்தன், அரசு இது வரை தங்களிடம் இரு தரப்புபேச்சுவார்த்தைகளைக் கைவிடவேண்டும் என்று கூறவில்லை என்றார்.

இது வரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்ல முடியாது, ஆனால் எந்த விஷயங்களைப் பற்றி பேசவேண்டும் என்பது குறித்து கண்டறியப்பட்டிருக்கிறது என்றார் சம்பந்தன்.

No comments:

Post a Comment