Pages

Wednesday, November 23, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கப்படும்!

Wednesday, November 23, 2011
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கப்படுமென்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டது.
இதன்படி இன்னும் இரண்டுவார காலத்திற்குள் அரசு இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எப்போது ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படும் என்பது பற்றி கருத்து வெளியிட்ட ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கோஹன்ன, கூடிய விரைவில் இந்த அறிக்கை ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியவை வருமாறு:

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கையோடு அதனை ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளிப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

இதனை ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறோம். இன்னும் ஓரிரு வார காலப்பகுதியில் அறிக்கையை நாம் கையளிப்போம்.

நாடாளுமன்றத்திற்கு அறிவிக்காமல் அறிக்கையை சமர்ப்பிக்கப் போவதில்லையென்று ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதன்படியே செயற்படுகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டது.

2002ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

No comments:

Post a Comment