Pages

Sunday, October 2, 2011

சர்வதேச ரீதியாக இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து மீள தேசிய அரசாங்கம்??

Sunday, October 02, 2011
சர்வதேச ரீதியாக இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக சுமத்தப்பட்டுவரும் யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கையர் என்ற ரீதியில் இணைந்து அவற்றை எதிர்கொள்வதற்கு தேசிய அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்காக ஜனாதிபதிஇ ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அநேகமாக அழைப்பு விடுக்கக் கூடும்

என அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ரீதியாக அதிவிசேடமான பொது விடயமொன்றை மையப்படுத்திக்கொண்டு குறித்த ஒரு காலப்பகுதிக்கு இந்த தேசிய அரசாங்கம் என்ற செயல்திட்டத்தை முன்னெடுப்பது குறித்து கடந்த சில நாட்களாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடனும் சிரேஷ்ட அதிகாரிகள் சிலருடனும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலைமையின் கீழ், இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, எதிர்க்கட்சியிலுள்ள எந்தவொரு கட்சிக்கோ எதிராக வன்முறைகளைக் கையாள வேண்டாம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத் தரப்பினருக்கு அறிவூறுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவருக்கோ, எதிர்க்கட்சியின் முக்கியதஸ்தர்களுக்கோ அபகீர்த்தியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் தேர்தல் பிரசாரப் பிரிவிற்குப் பொறுப்பான அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment