Pages

Saturday, August 20, 2011

புலிகளிருந்த காலத்தை விடவும் மர்மமனிதர்களால் மக்கள் அச்சத்தில்: ஐ.தே.க!

Saturday, August 20, 2011
புலிகள் இருந்த காலத்தில் நிலவிய அச்சமான சூழ்நிலையை விடவும் தற்போது கிறீஸ் பூதம் என்ற பிரச்சினையால் மக்கள் அதிகம் அச்சமடைந்துள்ளனர். எனவே, அரசாங்கம் மக்களின் அச்சத்தைப் போக்கி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வினை காணாமல் அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றது. அரசியல் அழுத்தங்களால் பொலிஸாரும் சுயமாக செயற்படாமலும் இருக்கின்றனர். இதனால் தான் பொதுமக்கள் சட்டத்தை கையிலெடுக்கின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டுகின்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது.

முஸ்லிம் எம்.பிகள் பலர் அரசாங்கத்துடன் இருக்கின்றார்கள். ஆனால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த கிறிஸ்பூதம் தொடர்பான பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுப்பதில் அவர்கள் முறையான பங்களிப்பை வழங்காதுள்ளார்கள்.

அமைச்சர்களுக்கு பிரச்சினையில்லை அவர்கள் மிகவும் பாதுகாப்பாக டிபண்டர் வாகனங்களில் செல்லுகின்றார்கள். அவர்களின் குடும்பங்களுக்கும் பிரச்சினைகள் இல்லை. நல்ல பாதுகாப்பு உள்ளது. ஆனால் சாதாரண மக்கள் இன்று அச்சமடைந்து பீதிக்குள்ளாகியுள்ளனர்.

No comments:

Post a Comment