Tuesday, December 6, 2011

முல்லை பெரியாறு பிரச்னை மலையாள நடிகர்கள் திடீர் போராட்டம்!

Tuesday, December 06, 2011
கொச்சி : முல்லை பெரியாறு பிரச்னையில் சுமூகமான தீர்வு கோரி மலையாள நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி திடீர் போராட்டம் நடத்தினர். முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழகம், கேரளா இடையே பிரச்னை இருந்து வருகிறது. முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளாவின் முடிவுக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்பிரச்னை தொடர்பாக தமிழக, கேரள எல்லையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பிரச்னை தீவிரமாகி உள்ளது. முல்லை பெரியாறு அணை பிரச்னையில் சுமூகமான தீர்வை விரைந்து எடுக்கக் கோரி மலையாள திரையுலகம் சார்பில் நேற்றிரவு போராட்டம் நடந்தது. கொச்சியில் கேரள ஐகோர்ட் அருகே மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கம், திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு மற்றும் வினியோகஸ்தர் சங்கம் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தின.
நடிகர்கள் சுரேஷ் கோபி, திலீப், முகேஷ், இன்னொசென்ட், இயக்குனர்கள் கமல், உன்னி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்க முடியாத நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், முல்லை பெரியாறு பிரச்னையில் கேரள அரசின் நடவடிக்கைக்கு மலையாள திரை உலகினர் முழு ஆதரவையும் வழங்குவது என்று உறுதி மொழி எடுத்தனர்.

No comments:

Post a Comment